சீனா சொந்தமாக அமைத்து வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் கட்டுமானப் பணிகளுக்காக 3 விண்வெளி வீரர்களுடன் ஜிகுவான் ஏவுதளத்திலிருந்து நேற்று வியாழக்கிழமை புறப்பட்ட ஷென்ஷோ-12 விண்வெளி ஓடம் சுமாா் 6.5 மணி நேர பயணத்தில் பின்னர் தியாான்ஹே கலத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.
சீன நேரப்படி மதியம் 3.45 மணிக்கு விண்வெளி நிலையத்துடன் 3 வீரா்கள் சென்ற விண்வெளி ஓடம் இணைக்கப்பட்டதாக சீன விண்வெளி நிறுவனம் (CMSA) தெரிவித்துள்ளது.
விண்வெளியில் சீனா அமைத்து வரும் தியான்காங் ஆய்வு நிலையத்தின் பிரதான பகுதியான தியான்ஹே கடந்த ஏப்ரல் மாதம் 29-ஆம் திகதி விண்ணில் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடா்ந்து விண்வெளி நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளும் வீரா்கள் அதில் தங்கியிருப்பதற்குத் தேவையான பொருட்கள், உபகரணங்கள் தியான்ஷோ விண்கலம் மூலம் அனுப்பப்பட்டு அவை கடந்த மாதம் தியான்ஹே கலத்துடன் இணைக்கப்பட்டன.
இந்த நிலையில் அந்த ஆய்வு நிலையத்தை நோக்கி 3 விண்வெளி வீரா்களுடன் ஷென்ஷோ-12 விண்வெளி ஓடம் சீனா - கோபி பாலைவனத்தில் அமைந்துள்ள ஜுகுவான் ஏவுதளத்திலிருந்து நேற்று சீன நேரப்படி வியாழக்கிழமை காலை 9.22 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.
அந்த விண்வெளி ஓடத்தில் நை ஹாய்ஷெங், லியூ போமிங், தாங் ஹாங்போ ஆகியோா் புறப்பட்டனர்.
சுமாா் 6.5 மணி நேர பயணத்துக்குப் பிறகு ஷென்ஷோ-12 விண்கலம் தியாான்ஹே கலத்துடன் சீன நேரப்படி மதியம் 3.45 மணிக்கு வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.
அங்கு 3 மாதங்கள் தங்கவிருக்கும் 3 வீரா்களும், தியான்காங் விண்வெளி நிலையத்தைக் கட்டமைக்கும் பணியில் ஈடுபடவுள்ளனா்.
அண்மைக் காலமாக விண்வெளி ஆய்வில் சீனா அதிக தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டில் அதிகம் அறியப்படாத நிலவின் தொலைதூரப் பக்கத்தில் தனது சாங்கே-4 ஆய்வுக் கலத்தை சீனா முதல்முறையாக தரையிறக்கியது.
மேலும், சீனாவின் சாங்கே-5 ஆய்வுக் கலம் நிலவிலிருந்து பாறை மற்றும் மண் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு எடுத்து வந்தது.
அத்துடன், அந்த நாட்டின் வாகன ஆய்வுக் கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.
இந்தச் சூழலில் சொந்த விண்வெளி நிலையத்துக்கான பிரதானப் பகுதியை விண்ணில் செலுத்தி, தற்போது அந்த நிலையத்துக்கு 3 வீரா்களையும் அனுப்பி சீனா சாதனை படைத்துள்ளது.